மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வீழ்ந்து, அரசியல் அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் மிக முக்கிய நெருங்கிய கூட்டாளியும், மூத்த எம்பியுமான கல்யாண் பானர்ஜி மீது பொதுமக்கள் நடத்திய அதிரடி தாக்குதல் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூக்ளி மாவட்டத்தின் சண்டிதலா காவல் நிலையத்திற்கு ஒரு குழுவினருடன் அவர் சென்றபோது, திடீரென திரண்ட ஆவேசமான போராட்டக்காரர்கள் அவரது வழியை மறித்து, கருப்புக் கொடி காட்டி “திருடன் திருடன்” என முழக்கமிட்டுள்ளனர்.

ஒருகட்டத்தில் நிலைமை கைமீறிப் போக, பாதுகாப்புப் படையினரையும் மீறி கல்யாண் பானர்ஜி மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நிலைதடுமாறிய அவர், தலையில் கையை வைத்தபடி நடுரோட்டிலேயே விழுந்த பரபரப்பான வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. சமீபத்தில் தெற்கு 24 பரகனாஸ் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் அகில இந்திய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மீது கல் மற்றும் முட்டைகள் வீசப்பட்டு கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதன் வடுக்கள் மாறுவதற்குள், தற்போது அடுத்த மூத்த தலைவர் குறிவைக்கப்பட்டிருப்பது மம்தா முகாமைக் கதறவிட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டிஎம்சியின் டாப் தலைவர்கள் மீது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து நடத்தி வரும் இந்தத் தாக்குதல்கள், மேற்கு வங்கத்தில் அக்கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்கு சரிந்துள்ளது என்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஹூக்ளி மாவட்ட காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடாத நிலையில், மாநிலம் முழுவதும் இரு தரப்பினரிடையே கடுமையான அரசியல் மோதல்களும், பதற்றமும் அதிகரித்துள்ளது.