அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் நேற்று நடைபெற்ற குடியேற்றத் தடைக்கு எதிரான போராட்டத்தை ஒளிபரப்பும் போது, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி, நேரடி ஒளிபரப்பின் போது ரப்பர் குண்டால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை நேரடியாக வெளியிட்டு வந்தார். தாக்குதலுக்கு முன், “நிலைமை வேகமாக மோசமடைகிறது”  என கூறியுள்ளார். சில நொடிகளுக்குப் பிறகு, அவர் வலியால் கத்தும் காட்சி ஒளிபரப்பாகியது.

அவரை நேரடியாக குறிவைத்த போலீசார், ரப்பர் குண்டை சுட்டதாக சிசிடிவி காட்சிகளில் தெரிகிறது.  இந்த சம்பவம் சர்வதேச அளவில் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி செனட்டர் சாரா ஹான்சன்-யங், “இது ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்” எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசு, அமெரிக்காவிடம் உடனடியாக விளக்கம் கோர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. போலீசார் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலும் வழங்கவில்லை. பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உரிமை என பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.