சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் மாவட்டம், சுபேலா பகுதியில் திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில், 17 வயதான ரௌனக் திவேதி என்ற பள்ளி மாணவன் உயிரிழந்தார். ரௌனக், தனது நண்பருடன் ஸ்கூட்டரில் ஸ்ரீராம் சௌக் நோக்கிச் சென்ற போது, திடீரென ஒரு தெரு நாய் வாகனத்தின் முன்னால் வந்து நின்றது.

அதன் மீது மோதாமல் இருக்க முயன்ற போது, ரௌனக் ஸ்கூட்டர் மீது கட்டுப்பாட்டை இழந்ததால், இருவரும் சாலையோர வடிகாலில் விழுந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

விபத்தில் ரௌனக் திவேதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் வடிகாலில் விழுந்தாலும் உயிருடன் தப்பினார். அவருக்கு சில காயங்கள் ஏற்பட்ட நிலையில், இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் ரௌனக்  உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது நண்பர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு மற்றும் தெருநாய்கள் கட்டுப்பாடு குறித்து மக்கள் மீண்டும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அதிக எண்ணிக்கையில் தெருநாய்கள் சுற்றித்திரிவதனால் இவ்வாறு இளைஞர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவது நாள்தோறும் அதிகரித்து வருவதாகவும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.