மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த பயாலஜி ஆசிரியை சினேகா ஷெலார் என்பவரது 3 வயது மகன் ரேயான்ஷின் பிறந்தநாளுக்காக, அங்கிருந்த ஒரு பேக்கரியில் ‘ஸ்பைடர் மேன்’ தீமிலான சாக்லேட் கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கேக் என்பதால் கவனமாக செய்யுமாறு கூறப்பட்டிருந்த நிலையிலும், கேக்கின் மேல் இருந்த சாக்லேட் பவுலிங் பின்களை (Bowling Pins) நேராக நிறுத்துவதற்காக பேக்கரி ஊழியர்கள் அதற்குள் இரும்பு கம்பிகளை (ஆணிகளை) வைத்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாக்லேட் என நினைத்து 3 வயது குழந்தை ரேயான்ஷ், அந்த இரும்பு ஆணிகள் இருந்த சாக்லேட் துண்டுகளை விழுங்கியுள்ளான். அடுத்த நாள் மற்ற குழந்தைகள் சாக்லேட்டிற்குள் கம்பி இருப்பதை பார்த்து எச்சரித்ததை அடுத்து, பதறிய பெற்றோர் குழந்தையை உடனடியாக ஜுபிடர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

அங்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், குழந்தையின் சிறுகுடலில் இரண்டு இரும்பு ஆணிகள் சிக்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், ஆணிகள் ஏற்கனவே குடல் பகுதிக்குச் சென்றுவிட்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல், அவை இயற்கையாக மலம் வழியாக வெளியேறுகிறதா என 48 மணி நேரம் கண்காணிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பெற்றோரின் நரக வேதனைக்குக் பின், நல்ல வேளையாக அந்த இரண்டு இரும்பு ஆணிகளும் 48 மணி நேரத்திற்குப் பிறகு இயற்கையான முறையில் வெளியேறின.

இதுகுறித்து போலீசில் புகாரளித்த போது, இது உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ் வருவதாகக் கூறினர். ஆனால், கேக் சாம்பிள் இல்லாமல் விசாரிக்க முடியாது என FDA கைவிரித்துவிட்டது. இதற்கிடையே, நுகர்வோர் நீதிமன்றம் மூலம் இந்த கடுமையான மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு பெற முடியும் என மகாராஷ்டிர நுகர்வோர் கவுன்சில் தெரிவித்துள்ளது.