
ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டத்தில் உள்ள தப்வாலி பகுதியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் மணமகன் அமர்ந்திருந்த நிலையில், மணமகளும் திருமணத்திற்குத் தயாராக இருந்தார்.
உற்சாகமாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நேரத்தில், ராஜஸ்தான் காவல்துறையினர் வருகை தந்து விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மணமகளாக வந்த பெண்ணும், அவருடைய பெற்றோர்களாக வந்தவர்கள் மற்றும் உறவினர்களாக வந்தவர்களும் போலியானவர்கள் என தெரியவந்தது. அவர்களால் அந்தப் பெண்ணின் பெயரைக் கூடச் சொல்ல முடியாத நிலை இருந்தது.
இந்த தகவல் வெளிவந்ததும் திருமண விழாவில் குழப்பம் ஏற்பட்டது. திருமண ஏற்பாட்டாளராக இருந்த ரேஷம் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டம் கோலாயத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது என்றும், கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலியான மணமகள் மற்றும் அவருடன் வந்தவர்கள் காவலில் எடுக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார், சம்பவ இடத்திற்கு ஹரியானா காவல்துறையை அழைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மணமகன், மணமகளுக்காக கொண்டு வந்த புடவைகள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் திருமணத்தை நிறுத்தி விட்டு பஞ்சாப் மாநிலத்துக்குத் திரும்பிச் சென்றார்.