ஒரு தாய் தனது குட்டிக்காக செய்யும் தியாகமும் பாசமும் எந்த உயிரினத்திலும் மாறாது என்பதற்கு உதாரணமாக, தாய் யானை தனது குட்டியை காப்பாற்றும் காட்சி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை இந்திய வனத்துறை (IFS) அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “எல்லா உயிரினங்களிலும் தாய்மார்கள் ஒன்றுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
That mother calf duo. Nobody should leave behind. pic.twitter.com/uX7Uo1FnLX
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 16, 2025
குறுகிய காணொளியில், ஒரு யானைக் கூட்டம் காட்டின் நடுவே உள்ள சாலையை கடக்க முயல்கிறது. வழியில் உள்ள சாய்வான மலைப்பாங்கான பகுதியை பெரிய யானைகள் எளிதாக ஏறினாலும், ஒரு சிறிய குட்டி யானைக்கு அது கடினமாகிறது. அது மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் வழுக்கி கீழே விழுகிறது.
இதைப் பார்த்த தாய் யானை உடனே நின்று, தன் குட்டியின் பக்கம் திரும்பி தும்பிக்கையால் மெதுவாகத் தள்ளி உதவத் தொடங்குகிறது. சில நேரங்களில் அதன் கால்களால் தாங்கி, சில நேரங்களில் மெதுவாக இழுத்து மேலே ஏற்ற முயற்சிக்கிறது. தாயின் ஒவ்வொரு சைகையிலும் அக்கறையும் பாசமும் வெளிப்படுகிறது.
அருகில் நின்றிருந்த மற்றொரு பெரிய யானையும் இதைக் கண்டு உதவ முன்வருகிறது. இரு பெரிய யானைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், குட்டி யானை இறுதியாக சாய்வை வெற்றிகரமாக கடந்து மேலே ஏறுகிறது. உடனே தாயிடம் ஓடிச் சேரும் குட்டியைத் தாய் அன்பாக தழுவிக் கொள்கிறது.
மேலும் இந்தக் காட்சி இணையத்தில் பார்ப்பவர்களின் இதயத்தை நெகிழ வைத்துள்ளது. தாய்–குழந்தை உறவு எத்தனை ஆழமானது என்பதையும், பாசம் உயிரின எல்லைகளை தாண்டுவதாக இருப்பதையும் இந்த வீடியோ மீண்டும் நினைவூட்டுகிறது.
