தமிழகத்தில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய தருணம். சங்ககால முதல் பெண்கள் இனத்தை போற்றி பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில் இதுபோன்ற கருப்பு நாட்கள் தற்போது தொடர்கதை ஆகி வருவது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். பயங்கரவாதிகளின் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இப்படியான கொடூரம் நடந்ததில்லை என்று எண்ணும் அளவுக்கு இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல் பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால் இத்தகைய கொடூரங்கள் தினம் தோறும் நிகழ்கிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு சிக்கி சீரழிந்து வருவது தொடர்பாக எந்த கவலையும் இல்லாத முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு பாதுகாப்பு என வாய்ச்சவடால் மட்டும் பேசினால் போதாது. திமுக ஆட்சி நீடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தமிழகத்தில் தொடர்கின்றது. இனிமேலாவது ஸ்டாலின் மாடல் அரசு விழித்துக் கொண்டு தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.