மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அதிமுக தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேசமயம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அதன்படி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி ரவீந்திரநாத் சென்றிருந்தார். அங்கு ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அனைத்து மாவட்ட இளைஞர்களும் ஒருங்கிணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்.

அம்மா ஜெயலலிதாவின் லட்சியம் நிறைவேறுவதற்கு பாடுபட வேண்டும். ஜெயலலிதா நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உடல் நலம் சரியில்லாத சமயத்திலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட்சி செய்த கட்சி மீண்டும் ஆளுகின்ற வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். ஜெயலலிதாவின் உழைப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காக தான் ஓபிஎஸ் ஐந்து ஆண்டு காலமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து ஆட்சியை நிறைவு செய்தார்.

ஆனால் அந்த நன்றியை அவர் எதிர்பார்க்க மாட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல்வேறு அவலங்களை கட்சி சந்தித்து வருகின்றது. தொண்டர்களுடைய எழுச்சி ஒரு நாள் வெடித்து அது புரட்சியாக மாறும். அன்று ஜெயலலிதாவின் கனவு நினைவாகும். அதிமுக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தான் சந்தித்து வருகின்றது. இரண்டு கைகளையும் தட்டினால் தான் ஓசை வரும். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பம். இதனைப் புரிந்தவர்கள் புரிந்து நடந்தால் அனைவருக்கும் நல்லது, இல்லையென்றால் தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக எச்சரித்துள்ளார்.