தமிழகத்தில் கொரோனா பரவல் காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக இல்லம் தேடி  கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தன்னார்வலர்கள் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களின் வீடுகளுக்கு அருகே வகுப்புகள் எடுப்பார்கள். இதில் 12-ம் வகுப்பு வரை படித்த அனைவரும் 1 முதல் 5–ம் வகுப்பு மாணவர்களுக்கும், பட்டம் பெற்றவர்கள் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் கற்பித்தனர். மேலும் உள்ளூர் தன்னார்வர் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களை தவிர பெற்றோர்கள் வந்து தங்களை தொண்டர்களாக பதிவு செய்து கொள்கின்றனர்.

இதில் வாரம் முழுவதும் ஒவ்வொரு குழு மாணவர்களுக்கும் சுமார் ஆறு மணி நேரம் வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் பல ஆசிரியர்கள் இதில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, இல்லம் தேடி கல்வி  திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியர் நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் தற்காலிக ஆசிரியர்கள் தேவை உள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலமாக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை பணியமத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

மேலும் வருகிற ஒன்பதாம் தேதிக்குள் இந்த பணியானது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் இப்படி தற்காலிக ஆசிரியர் பணியமர்த்தும் போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது இல்லம்  தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள் தகுதி உடையவராக இருப்பின் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மேலும் பள்ளி  மேலாண்மை குழு வாயிலாக தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த இல்லம் தேடி கல்வி பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும் பள்ளி மேலாண்மை குழு மூலமாக நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணி விடுப்பு செய்யப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆசிரியர்கள் பணி சுமை ஓரளவுக்கு குறைவும் என எதிர்பார்க்கப்படுவதால் பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.