
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மே இரண்டாம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக விவாதம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவதற்கான திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் நிலையில் இந்த திட்டம் தொடர்பாக விவாதம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் 8 மணி நேரமாக இருந்த வேலை நேரம் தற்போது 12 மணி நேரமாக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.