பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அதன்பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வதுபட்டமளிப்பு விழாவில் 1528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். இதையடுத்து ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன்பிறகு திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எனது தமிழ் குடும்பமே (தமிழில் பேசினார்).. எனது தமிழ் குடும்பத்திற்கு முதலில் எனது 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. தமிழகத்தில் இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.. புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம். தமிழகத்தின் வளர்ச்சிக்கான சுமார் 20000 ரூபாய் கோடி மதிப்பு திட்டங்களை வழங்கியுள்ளோம்.

2023 இன் கடைசி 2 வாரங்கள் தமிழகத்தில் பலருக்கு ஆழ்ந்த துன்பத்தை கொடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். வெள்ள பாதிப்பின் போது அனைத்து உதவிகளையும் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்தது. தமிழகத்தில் கனமழையால் உயிரிழப்பு பொருட்கள் இழப்புகள் ஏற்பட்டன இந்த துயரமான சூழலில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை இழந்தது உண்மையில் மிகப்பெரிய துன்பம். விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டனாக இருந்தவர். தேச நலனுக்கு மட்டுமே கேப்டன் விஜயகாந்த் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தார். திரைப்படங்களில் அவரது செயல்பாடு மூலம் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன் நிறுத்தினார் விஜயகாந்த். விஜயகாந்தின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் மக்களுக்கும் இழப்பு.விஜயகாந்த்தை இழந்த குடும்பத்திற்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் இழந்ததும் பெருந்துன்பம்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்ற வேண்டும். கலாச்சாரத்துடன் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு வளர்ச்சியின் பிரதிபலிப்பு தமிழ்நாடு. தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் தனக்கு புதிய சக்தி கிடைக்கிறது. எனக்கு பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தமிழ் பண்பாட்டை அறிகிறேன்.. தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை.. உலகின் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழின் பெருமையை பற்றி கூறாமல் நான் இருந்ததில்லை.

தமிழ் பண்பாடு, கலாச்சாரம் உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன. திருவள்ளுவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளனர். சி.வி ராமன் போன்ற திறமையாளர்களை இந்த தமிழக மண் உருவாக்கியுள்ளது. இந்தியா உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது” என்றார். எனது தமிழ் குடும்பமே என்ற வார்த்தை அடிக்கடி குறிப்பிட்டு பிரதமர் மோடி பெருமையாக பேசினார்..