உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் பின்னர் படிப்படியாக தாக்கம் குறைந்தது. கொரோனா பாதிப்பால் ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவில் 3000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் 215 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கம் பெரிய அளவில் இல்லை எனவும் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த 2-ம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறந்த நிலையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தேவைப்பட்டால் பள்ளிகளில் மாஸ்க் அணிய உத்தரவிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்தாலும் தீவிரமாக இல்லை. தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும்.

இருப்பினும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அதற்கான நடவடிக்கைகளை செய்து வருகிறது என்று கூறினார்.