தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த உரிமை தொகை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், அந்தியோதயா அன்னை யோஜனா ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் கூட்டுறவு துறை சார்பாக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தரும் பணியை கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குமாறு அரசிடம் அனுமதி கூறப்பட்டுள்ளது. அனுமதி வழங்கியதும் இந்த பணி செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.