தமிழகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று தங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி நிதித்துறை செயலாளராக உதயச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக ககன் தீப்சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளராக செந்தில்குமார் மற்றும் உள்துறை செயலாளராக அமுதா என 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி காஞ்சிபுரம் எஸ் பி சுதாகருக்கு செங்கல்பட்டு எஸ்பி ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ் க்கு விழுப்புரம் எஸ் பி ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.