
வடக்கு கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு சில இடங்களில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேக பலத்த தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். மேலும் இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.