அடுத்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சமீபத்தில் ஐபிஎல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் ஒரு அணி குறைந்தபட்சம் 5 வீரர்கள் வரை தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் ஒருவரையும் தக்க வைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது சர்வதேச அணிகளில் விளையாடி ஓய்வு பெற்ற ஒருவரை ஒரு அணி ஏலத்தில் எடுக்கும் போது அந்த தொகையை சம்பந்தப்பட்ட அணிகள் கொடுத்துவிட்டு அவரைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தியும் பிசிசிஐ பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதன் காரணமாக அடுத்த சீசனில் எம்.எஸ் தோனி சிஎஸ்கே அணையில் விளையாடுவாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக எம்.எஸ் தோனியின் ஜெர்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்கள் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விடை கொடுப்பது போல் பதிவிட்டு  இருந்ததால் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்டை எம்.எஸ் தோனிக்கு பதில் சிஎஸ்கே நிர்வாகம் தக்க வைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ரிஷப் பண்ட் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், நான் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால் என்னை எந்த அணியாவது வாங்குவார்களா.? இல்லையெனில் வாங்க மாட்டார்களா.? அப்படி வாங்கினால் என்ன விலைக்கு வாங்குவார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதன் காரணமாக டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் விலகுவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் அவரை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்கலாம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.