ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், நடராஜன் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இருப்பினும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடிகர் சரத்குமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த வேகப்பந்து வீச்சாளரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜர் அவர்களின் பெயர் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது. மேலும் வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வு குழு மறுபரிசீலனை செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.