2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி உற்சாகத்தோடு பள்ளிக்கு சென்ற அந்த பிஞ்சு குழந்தைகள் நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்கள் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என. தங்கள் பிள்ளைகளுக்கு தலைவாரி பூச்சூடி பள்ளிக்கு அனுப்பிய பெற்றோருக்கு இடியென  இறங்கியது அந்த செய்தி. காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் நடந்த அந்த கொடூர தீ விபத்தில் 94 பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் குடித்தது நெருப்பு.

தீ விபத்தில் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் கதறி துடித்தனர். சுட்டியாக சுற்றி திரிந்த மொட்டுகள் மலர்வதற்கு முன்பாகவே உதிர்ந்து போனது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதோடு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. உலகையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அந்த ரணம் ஏற்படுத்திய வடு மாறாமல் உள்ளது. இந்த கோர சம்பவம் நடந்த தினமான ஜூலை 16ஆம் தேதியை பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.  இனியும் இதுபோன்ற நடக்க கூடாது என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்கிறது.