2025 ஆசியா கப் தொடரில், இந்தியாவின் இளம் ஓப்பனராக விளையாடும் அபிஷேக் சர்மா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது அதிரடியான பேட்டிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

லீக் கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 13 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்த அபிஷேக், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். ஷாஹீன் ஆஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப் ஆகிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை தயக்கமின்றி ஆடிய அவர், அப்ரார் அக்மதின் பந்தில் ஹாரிஸ் ரவூஃஃக்கே கேட்ச் கொடுத்து வெளியானார்.

இந்த போட்டியில்,  வெற்றியின் நாயகனாக விளங்கிய அபிஷேக் சர்மா, ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதை பெற்றார். பின்னர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அவர் பாகிஸ்தான் அணியின் தற்போதைய பவுலிங் நிலைமை குறித்தும், முன்னாள் ஓப்பனர் வீரேந்தர் சேவாக் கூறிய முக்கியமான அறிவுரைகளையும் பகிர்ந்தார்.

“>

 

அபிஷேக் பேட்டியில், “வீரு பாஜி (சேவாக்) விளையாடிய காலத்தில் பாகிஸ்தான் பவுலர்கள் கடும் போட்டி கொடுத்தவர்கள். ஆனால் இப்போது அந்த அளவிற்கு திணற வைக்கும் பவுலர்கள் இல்லை” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், சேவாக் கூறியதாவது, “70, 80 ரன்களில் நின்றுவிடாமல், அவற்றை செஞ்சுரியாக மாற்ற வேண்டும். வாய்ப்புகள் எல்லாக் காலத்திலும் கிடைக்காது. சுனில் காவாஸ்கர் ஒரு முறை என்னிடம் சொன்னது போல, ‘ஓய்வுபெறும் போது நீ அடித்த 70, 80 ரன்கள் ஞாபகமாக இருக்கும்.

அவைகளை செஞ்சுரியாக மாற்றியிருக்கலாமே’ என எண்ணாமல் இரு. அந்த நாள் நல்ல பேட்டிங் செய்த நாளாக நினைவிருக்க வேண்டுமெனில், செஞ்சுரி அடைய முயற்சி செய்” என அபிஷேக் சர்மாவுக்கு சேவாக் அறிவுரை வழங்கினார்.