பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து செல்போனை கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

ஆனால் அவர் தன்னுடைய செல்போனை கொடுக்க மறுத்ததால் அவர்கள் கத்தியால் வாலிபரை குத்திவிட்டு செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட தான் தங்கி இருக்கும் அறைக்கு அவர் நடந்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்த வட மாநில தொழிலாளர்கள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.