சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் தனது விலை உயர்ந்த ஐபோன் தண்ணீரில் விழுந்ததால், அதை மீட்பதற்காக சற்றும் யோசிக்காமல் சுறாக்கள் நிறைந்த கடலில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சுறாக்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த நபரின் மொபைல் போன் தண்ணீரில் விழுந்தது.

சுற்றிலும் ஏராளமான சுறாக்கள் சுற்றித் திரிந்த போதிலும், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் அவர் உடனடியாக தண்ணீரில் குதித்து, நீந்திச் சென்று தனது போனை மீட்டுக்கொண்டு பத்திரமாக கரை திரும்பினார். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தச் செயலைப் பார்த்த இணையவாசிகள் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“>

சிலர் அந்த நபரின் துணிச்சலைக் கண்டு வியந்தாலும், பெரும்பாலானோர் இது ஒரு முட்டாள்தனமான செயல் என்றும், ஒரு மொபைல் போன் மனித உயிரை விட மேலானது அல்ல என்றும் விமர்சித்து வருகின்றனர். இவ்வளவு ஆபத்தான சூழலில் சுறாக்கள் அவரைத் தாக்காமல் விட்டது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றாலும், இத்தகைய ஆபத்தான செயல்களை யாரும் முயற்சி செய்யக்கூடாது என சமூக வலைதளங்களில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.