பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு சுதந்திரம் அடைந்து 75-ஆவது ஆண்டுகள் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றோம். நம்முடைய சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு நாட்டின் கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் சாதனையை சொல்கிறது. நீண்ட சுதந்திரப் போராட்ட களத்தில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் தவிர வீராங்கனைகள், பல வீரர்கள் பற்றிய வரலாறு இன்னும் தெரியப்படாமலே உள்ளது. தமிழகத்தில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர்.

இதில் பலரது தியாகங்கள் பங்களிப்புகள் பொதுவெளியில் அறியப்படாமலேயே மறைக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக உழைத்த தியாகிகளின் தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கால தலைமுறை அறிய அவர்களை பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது நமது கடமையாகும். இது குறித்து எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த குறைந்தபட்சம் ஐந்து சிறப்பு மாணவர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் பொருத்தமான ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது அறியப்படாத ஒரு சுதந்திர போராட்ட வீரர் அடையாளம் கண்டு அவர் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இந்த ஆராய்ச்சி திட்டத்திற்கான ஃபெலோஷிப் வழங்கப்படும். ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் சிறப்பிக்கப்படுவார்கள். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரர்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலி மேலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெருமையாகவும் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.