சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் சார் என்ற ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அதை திமுகவும் காவல்துறையும் சேர்ந்து மூடி மறைப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக கட்சியை சேர்ந்தவர் என்றும் அவர்  முக்கிய அமைச்சர்கள் சிலருடன் இருக்கும் புகைப்படங்களையும் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்திய நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சீமான் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 231 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி போராட முயன்றதாக கூறி அவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வதாக கூறி எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.