உத்தரப்பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிலிண்டர் ஏஜென்சிக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது காலி சிலிண்டர்களைத் தூக்கிக் கொண்டும், உருட்டிக் கொண்டும் முண்டியடித்து ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அடிப்படைத் தேவையான சமையல் எரிவாயுவைப் பெறுவதற்குக் கூட மக்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருப்பது, அங்குள்ள நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

​இந்த வீடியோ எக்ஸ் (X) வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் எரிவாயு விநியோகத்தில் கவனம் செலுத்தாமல், சிலைகள் மற்றும் கோவில்கள் கட்டுவதில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டுகிறது” என்று பலரும் தங்களது ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தத் தட்டுப்பாட்டிற்கு ஈரான் – இஸ்ரேல் போர் சூழலால் ஏற்பட்ட இறக்குமதி பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், முறையான விநியோகம் இல்லாததே இத்தகைய அவல நிலைக்குக் காரணம் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.