ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் திங்கள்கிழமை மாலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. அதாவது தோடா-போஸ்ட் எனப்படும் போதைப்பொருளை ஏற்றிய ஒரு பிக்அப் லாரி, போலீசார் அமைத்திருந்த தடுப்பை கடந்து, வேகமாக பொதுமக்கள் மீது மோதி, அருகிலுள்ள கடையிலும் மோதியது. இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், லாரி தடுப்பு சுவரை உழைத்துக் கொண்டு சென்ற நிலையில், பொதுமக்கள் நடமாடும் பகுதியில் புகுந்து, நேராக கடையை மோதும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வாகனம், முதலில் ஒரு போலீஸ் வேன் மீதும் மோதியது. லாரியின் வேகத்தால் அதில் பயணித்த கடத்தல்காரர் தூக்கி வீசப்பட்டார். அவர் பின்னர் தப்ப முயன்றபோதும், பொதுமக்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் ரிங்கு (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய வாகனத்தில் இருந்து மொத்தம் 68 கிலோ தோடா-போஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கான முன்னதாகவே போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்ததால், சந்தேக நபரைக் கைது செய்ய தக்க நேரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அவர் மீதான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.