கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் நாகரத்தினா (38) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் அந்த பெண்ணின் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ நாளில் இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கணவரும் அவரது குழந்தைகளும் சாம்பார் நன்றாக இல்லை என கூறியுள்ளனர். சாம்பார் சுவையாக இல்லை என கூறியது நாகரத்னாவுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் இரவு நேரத்தில் குழந்தைகள் மற்றும் கணவர் அனைவரும் தூங்கிய பிறகு நாகரத்தினா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நாகரத்தினா தற்கொலை செய்து கொண்டதை பார்த்ததும் கணவர் அதிர்ச்சி அடைந்த உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாம்பார் நன்றாக இல்லை எனக் கூறியதால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் நாகரத்தினாவின் பெற்றோர் இதனை மறுத்துள்ளனர். அதாவது வரதட்சணை கேட்டு தங்கள் மகளை அவர்கள் கொடுமைப்படுத்தியதாகவும் அவர்களே கொலை செய்துவிட்டு தற்போது தற்கொலை செய்து விட்டதாக நாடகமாடுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.