
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 100% வரை இருந்த நிலையில் பல இடங்களில் மழையும் பெய்தது. கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக அவ்வப்போது மழை பெய்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மே 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் மே 6ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மே 6-ம் தேதி திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டியும் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.