
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 50). இவரது பராமரிப்பில், ஜெயலட்சுமியின் தந்தை வேல் (வயது 78) கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
ஜூன் 17ஆம் தேதி, காளிமுத்து வேலை முடிந்து மாலை 6 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது, மனைவி ஜெயலட்சுமி, தலையிலும் முகத்திலும் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். உடனே மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ஜெயலட்சுமி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இதனையடுத்து, வீட்டிலேயே இருந்த ஜெயலட்சுமியின் தந்தை வேல் காணவில்லை என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரை தேடி வந்த போலீசார், நள்ளிரவில் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கும் நிலையிலேயே அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
ஜெயலட்சுமியின் மகன் திருப்பூரில் வேலைபார்த்துவருகிறார். இதனால், ஜெயலட்சுமி தந்தையை தனியே கவனித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதோடு, வயது காரணமாக பல உடல் நலக்குறைவுகளும் இருந்ததாக தெரிகிறது.
இவற்றையெல்லாம் முகம் கோணாமல், மகள் ஜெயலட்சுமி கவனித்து வந்தார் என்றாலும், வேல் அடிக்கடி “என்னை சரியாக கவனிக்கவில்லை” எனக் கூறி மகளிடம் தகராறு செய்துள்ளார்.
அன்றைய தினம் மதியத்தில் சாப்பாடு கொடுத்து விட்டு, ஜெயலட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வேல் வீட்டுக்குள் நுழைந்து, மண் வெட்டியால் மகளை சரமாரியாக அடித்து கொன்றுள்ளார். பின்னர், நடக்க முடியாத நிலையில், மேலப்பாளையம் காவல் நிலையத்துக்கு நடந்து சென்று அருகிலுள்ள மரத்தடி நிழலில் உட்கார்ந்து இருந்துள்ளார்.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது முதியவர் கூறியதாவது, எனக்கு 78 வயது ஆகிவிட்டது கண் புரை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என்னை சரியாக கவனிக்காமல் கோயில், குளம் என சுற்றுவதிலேயே மகள் நேரத்தை செலவிட்டாள். எனக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கொடுக்கவில்லை.
இதனால் எனக்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று மாலை இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்ட போது என்னை அடிபதற்கு கை ஓங்கினார். இதனால் கோபத்தில் நான் இரும்பு கம்பியால் மகளின் தலையில் ஓங்கி அடித்தேன். கீழே விழுந்ததும் மயக்கத்தில் இருக்கிறாள் என நினைத்தேன்.
அதன் பிறகு தான் அவர் இறந்தது தெரியவந்தது. இதனால் தவறு செய்து விட்டோம் என நினைத்து காவல் நிலையத்தில் சரணடைய நடந்தேன். அதிக தூரம் நடக்க முடியாததால் மரத்தடியிலேயே படுத்து விட்டேன் என கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.