கர்நாடக மாநிலம் யாத்கிர் ரயில்வே நிலையத்தில் டிக்கெட் பெற பயணிகள் காத்திருந்த போது நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் கிளார்க் சி. மகேஷ், தனது பணியை புறக்கணித்து 15 நிமிடத்துக்கும் மேலாக தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் மூழ்கியிருந்தார். இந்த நேரத்திலும், பயணிகள் “டிக்கெட் வேண்டும்” என்று கேட்டபோது, “ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம்…” என்றே பதிலளித்து, டிக்கெட் வழங்க மறுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவில், மகேஷ் அழைப்பில் பேசி கொண்டிருப்பதையும், பயணிகள் அவரிடம் டிக்கெட் கேட்பதையும், அவர் அமர்ந்திருப்பதையும் தெளிவாகக் காண முடிந்தது.

ஒருவர் கடைசியில், “அவரு 15 நிமிஷமா ‘ஒரு நிமிஷம்’ தான் சொல்றாரு” என்று கூச்சலிட, மகேஷ் அமைதியாக காத்திருக்குமாறு கூறுகிறார். பயணிகள் முகங்களில் எரிச்சலும், ஏமாற்றமும் வெளிப்பட்டது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு பயனர் X-யில், “இது தவறல்ல… இது அதிகார கோபம்! பணம் செலுத்தும் குடிமக்களை மாடு மாதிரி நடத்துறாங்க” எனக் கூறி கண்டனம் தெரிவித்தார்.

இதன் பின்னணியில், ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டனர். ஒரு பயணி வீடியோவை நேரடியாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு அனுப்பியதும், ரயில்வே பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

பின்னர், யாத்கிர் ஸ்டேஷன் மேனேஜர் பகீரத் மீனா விளக்கம் அளித்தார். “சரியான முறையில் கடமையை நிறைவேற்றாததற்காக, அலட்சியம் காட்டிய டிக்கெட் கிளார்க் சி. மகேஷ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்.

இந்த சம்பவம், அரசு சேவைகளில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தேவையை மீண்டும் நினைவூட்டுகிறது. பொதுமக்கள் சேவைக்கு வருகிறார்கள், ஆனால் சிலர் அவர்களை உதாசீனப்படுத்துவது ஏற்க முடியாதது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.