
திருச்சி மாவட்டம் இடையாத்திமங்கலம் எனும் பகுதியில் அங்குசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவக்குமார் (39) என்ற மகன் இருக்கிறார். இவருக்கும் நர்மதா(31) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குரு பிரசாத் (8) மற்றும் கிருத்திகா(6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக நர்மதா தனது குழந்தையுடன் தனியார் மில் குடியிருப்பில் வாழ்ந்து வந்ததோடு, அதே மில்லில் வேலை செய்து வந்தார்.
சிவகுமார் அவ்வப்போது வீட்டிற்கு சென்று குழந்தைகளை பார்த்து செல்வது உண்டு. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி அன்று குழந்தைகளை பார்க்க சிவக்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை தனது மகனின் பிறந்த நாள் என்பதால் அங்கேயே தங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுவனின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடினர். பின் அனைவரும் தூங்கச் சென்றனர். நேற்று காலையில் சிவக்குமார் அவசர அவசரமாக வீட்டில் இருந்து புறப்பட்டார்.
அதே நேரம் வீட்டில் குழந்தைகள் அழுது கொண்டிருந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து சந்தேகம் அடைந்தனர். இதனால் வீட்டின் கதவை திறந்து பார்க்கும் போது நர்மதா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதற்கிடையில் மனைவியை கொலை செய்த அவர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரிடம் காவல் துறையினர் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது சிவக்குமார் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்று கேட்டதற்கு நர்மதா மறுத்துள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டு குழந்தை அழுது கொண்டே இருந்தது. அதனால் வீட்டில் உள்ள பால் பாக்கெட்டை எடுத்து கொடுக்குமாறு நர்மதா சிவகுமாரிடம் கூறியதற்கு, சிவக்குமார் அடுத்த வீட்டு குழந்தைக்கு எதுக்கு நான் வேலை செய்ய வேண்டும் என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நர்மதா அப்படி என்றால் நீ வீட்டில் இருக்க வேண்டாம் வெளியே போ என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சிவகுமார் வீட்டிலுள்ள கத்தியை எடுத்து நர்மதாவை குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.