தமிழக அரசு வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட தனி மையத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளும் தெரிந்த பெண்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று எப்படி உத்தரவிடலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக அரசு தற்போது ஹிந்தி தெரிந்தால் மட்டும் தான் வேலை என்று அறிவித்துள்ளது. இது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு தானே.? மும்மொழி கொள்கையை திணிப்பது தான் உங்களுடைய திராவிட மாடலா என்று கூறியுள்ளார். மேலும் இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மகளிர் உதவி கட்டுப்பாட்டு மையத்தில் பணியில் சேர தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று வெளியான அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது அந்த வேலைக்கு ஹிந்தி கட்டாயம் என்பதை தற்போது அரசாங்கம் நீக்கிவிட்டது. மேலும் தவறுதலாக விளம்பரம் செய்த இணை இயக்குனர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.