திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவில் அருகில் 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் கிணற்றின் நீர் வரத்து குறைந்துள்ளதால் கிணற்றை தூர் வாறுமாறு ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் யூனியன் பொது நிதி முன்னிலையில் கிணறு தூர்வாரும் பணி தொடங்கியது. அப்போது கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறியப்பட்டு வெளியேற்றினர். பின்பு கிணற்றின் அடியில் உள்ள சகதிகளை அப்புறப்படுத்திய போது சுமார் 1 1/2 உயரமுள்ள ஐம்பொன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

மிகவும் பழமை வாய்ந்த அந்த சிலை கருடாழ்வார் சிலை எனவும், இதன் மதிப்பு பல கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த சிலை பற்றி வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் அந்த சிலையை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்பு வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த சிலையை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று சிலை எப்படி கிணற்றுக்குள் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கும், தொல்லியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.