
மதுரை மாவட்டம் வி.சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கில் ஆஜராகாததால் போலீசார் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது பிரபாகரன் இல்லாததால் போலீசார் அவரது தந்தை முத்துவேலிடம் பிரபாகரனை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி விட்டு சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்த மகனிடம் முத்துவேல் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறினார்.
இதனை கேட்டு கோபமடைந்த பிரபாகரன் தனது நண்பரான அய்யனார் என்பவருடன் இணைந்து நள்ளிரவில் முகமூடி அணிந்து வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு நுழைந்தார். அதன் பிறகு காவல் நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டர், மேஜை அனைத்து பொருட்களையும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி காவல் சோதனை சாவடி அருகே சென்றபோது பிரபாகரனையும், அய்யனாரையும் போலீசார் கைது செய்து மதுரை மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தப்பியோட முயன்ற பிரபாகரன் கண்மாய் பகுதியில் குதித்து ஓடிய போது அவரது வலது கை, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.