
வங்க கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவும் நிலையில் இன்று அந்த பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் வருகின்ற மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரும்.
இதனால் தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழையும் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக கடற்கரை, குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.