மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி, பிந்த் மாவட்டத்தில் உள்ள தீன்தயாள் டாங்ரோலியா மகாவித்யாலயா என்ற கல்லூரியில், பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு கணிதத் தாள் தேர்வின் போது, முறைகேடு நடந்ததாக கூறி, கலெக்டர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா நேரில் சென்றார்.

அப்போது ரோஹித் ரத்தோர் என்ற மாணவர் தேர்வில் காப்பி அடித்ததாக சந்தேகம் வெளியானதை அடுத்து, அவரை நாற்காலியில் இருந்து இழுத்து மாவட்ட ஆட்சியர் பலமுறை அறைந்ததாக தெரிகிறது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கலெக்டர், “உன் வினாத்தாள் எங்கே?” என்று கேட்டு, மாணவனை அறைக்குள் அழைத்துச் செல்லும் காட்சியுடன் வீடியோ முடிகிறது

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த கலெக்டர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, “தேர்வு மையத்தில் ஒரு திட்டமிட்ட முறைகேடு நடைபெற்றதாக புகார் வந்தது. சில மாணவர்கள், வினாத்தாள்களை வெளியே எடுத்துச் சென்று விடைகளை பார்த்து எழுதி மீண்டும் கொண்டு வருகிறார்கள் என்று தகவல் வந்ததால், நேரில் சென்று ஆய்வு செய்தேன்” என கூறினார்.

மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், “மாணவனிடம் தவறு இருந்தாலும், ஒரு அதிகாரி இப்படி அறைவது சட்டப்படி சரியா?” என்ற கேள்வியைக் கேட்டுள்ளனர்.

ஏற்கனவே, கலெக்டர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா மீது உயர்நீதிமன்றம் சில கடும் விமர்சனங்களை தெரிவித்திருந்தது. தற்போது, இந்த வீடியோ வெளியாகிய பிறகு, மாணவர்களின் உரிமைகள், தண்டனைகள், அதிகாரத்தின் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.