ஏர் இந்தியா விமானத்தின் சேவை குறித்துப் புகார்கள் எழுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை ஒரு பயணி தனது லண்டன் பயணத்தின் போது சந்தித்த அனுபவம் காண்போரையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

ராகுல் ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர், லண்டன் செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் ‘XL’ ரக முன்வரிசை ஜன்னல் இருக்கையைத் (Front row XL window seat) தேர்ந்தெடுத்துள்ளார். இதற்காகக் கூடுதல் கட்டணமும் செலுத்தியுள்ளார்.

ஆனால், விமானத்திற்குள் சென்ற அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வாங்கிய ஜன்னல் இருக்கைக்கு அருகே ஜன்னலே இல்லை! அதுமட்டுமின்றி, இருக்கை மிகவும் குறுகலாக இருந்ததால் கையை வைக்கக்கூட இடமில்லாமல் தவித்துள்ளார்.

கால்கள் விமானத்தின் கதவில் முட்டும் அளவுக்கு நெருக்கடியாக இருந்துள்ளது. “ஏர் இந்தியாவில் பயணம் செய்வது சித்ரவதை. பயணிகளைப் போல நடத்தாமல் கால்நடைகளைப் போல நடத்துகிறார்கள்” என அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, “இது குறித்து உள்நாட்டிற்குள் ஆய்வு செய்யப்படும்” என ஏர் இந்தியா நிறுவனம் மழுப்பலாகப் பதிலளித்துள்ளது.