காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே நடந்த இஸ்ரேலிய தாக்குதலில், அல் ஜசீரா சேனலின் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். இதில் செய்தியாளர்கள் அனஸ் அல்-ஷெரீப், முகமது கிரீகே மற்றும் கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால், மோமென் அலிவா ஆகியோர் அடங்குவர்.

பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 7 பேர் உயிரிழந்ததாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. 28 வயதான அனஸ் அல்-ஷெரீப், இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, காசா நகரத்தில் இஸ்ரேலிய குண்டுவீச்சு தீவிரமடைந்துள்ளதாக சமூக வலைதளமான X-இல் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“>

 

இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் ஒப்புக்கொண்டு, அனஸ் அல்-ஷெரீப்பை “பத்திரிகையாளராக நடித்த ஹமாஸ் பயங்கரவாதி” என குற்றம் சாட்டியுள்ளது. அவர் ஹமாஸ் பயங்கரவாத பிரிவின் தலைவராக இருந்து, இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் படைகளுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை நடத்த பொறுப்பானவர் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், பத்திரிகையாளர் பாதுகாப்பு குழுக்கள், ஆதாரமின்றி பத்திரிகையாளர்களை போராளிகள் என குற்றம் சாட்டுவது செய்தி சுதந்திரத்திற்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ளன.

“>

 

சம்பவம் குறித்து அல் ஜசீரா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன பத்திரிகையாளர் சங்கம் இதை “இரத்தக் களரி குற்றம்” எனக் கூறி கண்டித்துள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து காசாவில் சுமார் 200 ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் அல் ஜசீரா இடையே பல ஆண்டுகளாக பதற்றமான உறவு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.