கோரமண்டல் ரயிலில் கவாச் என்னும் ரயில் பாதுகாப்பு கருவி இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் வழித்தடத்தில் கவாச் கருவி பொருத்தப்படவில்லை என்று ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா உறுதிப்பட தெரிவித்துள்ளார். ரயில் மோதல்களை தவிர்ப்பதற்காக கவாச் எனும் அதிநவீன மின்னணு தொழில் நுட்பமானது உருவாக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வேகம், சிக்னலை மீறி ரயில் சென்றால் கவாச் கருவி மூலம் எச்சரிக்கை கொடுக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தில் தாமாகவே இந்த கருவியானது பிரேக் போட்டு ரயில் நிறுத்தப்படும்.

இதுதான் இந்த கருவியின் சிறப்பு அம்சமாகும். கடந்த 2022 மத்திய பட்ஜெட்டில் கவாச் எனும் ரயில் பாதுகாப்பு கருவி உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் கவாச் கருவி குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ விளக்கம் அளிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் திரிணாமுல் கட்சியின் சாகேத் கோகலே ரயில் வழித்தடங்களில் இரண்டு சதவீதம் மட்டுமே கவாச் கருவி  பொருத்தப்பட்டது ஏனென்று கேள்வி எழுப்பி உள்ளார்.