மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்..

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்..

விண்ணப்பிக்கும் நடைமுறைகள் :

  1. குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற, கீழ்கண்ட தகுதிகளை பெற்ற குடும்பங்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15,  2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. இத்திட்டத்திற்கு பொது விநியோக நியாய விலைக்கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக்கடை அமைந்திருக்கும் விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  3. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்.

குடும்பத் தலைவி வரையறை :

  1. குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர்.
  2. ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
  3. குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார்.
  4. குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த குடும்பத் தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.
  5. திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவர்.
  6. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க செய்யலாம்.

பொருளாதாரத் தகுதிகள் :

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்காணும் 3 பொருளாதார அளவு கோள்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

  1. ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
  2. ஐந்து  ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
  3. ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
  4. பொருளாதாரத் தகுதிகளுக்காக தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற தகுதி இல்லாதவர்கள் :

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் கீழ்காணும் ஏதாவது ஒரு வகையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி இல்லாதவர் ஆவர்.

  1. ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
  2. குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
  3. ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி தொழில்வரி செலுத்துவோர்.
  4. மாநில ஒன்றிய அரசு ஊழியர்கள் /பொதுத்துறை நிறுவனங்கள் /வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
  5. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களை தவிர), அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
  6. சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
  7. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
  8. ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP),  விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஒய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெரும் குடும்பங்கள்.

மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லை..

விதிவிலக்குகள் :

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெரும் உறுப்பினரை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளை பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..

https://twitter.com/rajiv_dmk/status/1677348575255367680