சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் நேற்று சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடைபெற்ற நிலையில் அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை காவல்துறையினர் அகற்றினர். அதாவது கருப்பு துப்பட்டாவுடன் உள்ளே செல்ல அனுமதி கிடையாது எனவும் அதனை வெளியே வைத்துவிட்டு வரவேண்டும் என்றும் போலீசார் கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டது தான் இதற்கு காரணம். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சென்னை காவல் பிரிவிற்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. விழா அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களை காவல்துறையினர் தணிக்கை செய்தனர். மேலும் அப்போதுதான் கருப்பு துப்பட்டாவை அணிந்து வந்தவர்களிடம் இருந்து அந்த துப்பட்டாவை வாங்கி வைத்தனர் என்று கூறப்பட்டுள்ளது.