
நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து அது தொடர்பான பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமான ஒன்று, பாகிஸ்தான் பயன்படுத்திய சீன ஏவுகணை தொடர்பான சர்ச்சை. இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின்போது பாகிஸ்தான், துருக்கி மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட PL-15E ஏவுகணைகளை பயன்படுத்தியது. ஆனால் அவை எந்தவித தாக்கமும் ஏற்படுத்த முடியாமல் இருந்தன. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, அனைத்து தாக்குதல்களையும் வெற்றிகரமாகத் தடுக்க முடிந்தது.
இந்த சூழ்நிலையில், சீனாவின் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் ஜாங் சியோகாங் தலைமையில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது PL-15E ஏவுகணையின் செயல்திறன் குறைவாக இருந்ததா? இந்தியா ரிவர்ஸ் இன்ஜினியரிங் மூலம் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளதா என கேள்விகள் எழுந்தன. இதற்கு பதிலளிக்க மறுத்த ஜாங், “இந்த ஏவுகணை ஒரு ஏற்றுமதி உபகரணமாகும். இது பல முறைகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பாதுகாப்பு கண்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டது” என்றார். அதாவது பாகிஸ்தான் ஒரு கண்காட்சிக்கு வைத்த உபகரணத்தையே தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக அவரது பதிலில் உறுதிப்படுகிறது.
இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலர் சீனாவின் ஆயுத உற்பத்தி தரம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். முக்கியமாக, பாகிஸ்தானின் அனைத்து நடவடிக்கைகளும் சீன மற்றும் துருக்கி ஆதரவுடன் இருந்தபோதிலும், இந்திய பாதுகாப்பு அமைப்பை மீற முடியாமல் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா தாக்குதலுக்கு பயன்படுத்திய வான் பாதுகாப்பு மற்றும் ஸாட்லைட் கண்காணிப்பு முறைமை மிகச் சிறப்பாக செயல்பட்டது என்றும் பாகிஸ்தான் தரப்பிலும் பரிதாபம் நிலவுகிறது.
இந்த மோதலுக்கு பின்னணி, ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தான். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததோடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. மேலும் இந்தியாவை தாக்குவதற்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சீன ஆயுதங்கள் செயல்திறனற்றவை என்பது இச்சம்பவம் மூலமாக தற்போது தெளிவாக தெரியவந்துள்ளது.