கன்னியாகுமரி மாவட்டம் மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரினித்(20) இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரினித் தனது தம்பி மற்றும் அவரது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

இதனையடுத்து நான்கு பேரும் குளத்தில் குளித்து முடித்துவிட்டு கரை ஏறிய போது பிரினித் கால் தடுமாறி குளத்திற்குள் விழுந்தார். அப்போது குளத்தினுள் உள்ள சேற்றில் பிரினித் கால் புதைந்ததால் அவர் நீரில் மூழ்கினார். அப்போது கரையில் நின்றிருந்த பிரினித் நண்பர்களும், தம்பியும் சேர்ந்து அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் பொதுமக்களை அழைத்து வந்து பிரினித்தை குளத்திலிருந்து மீட்டனர். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரை உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் பிரினித்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரினித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.