காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் கெரன் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் பனிபொழிவால் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேலும் சில  பிரச்சனைகள் இருந்ததால் கிரால்போராவில் உள்ள மாவட்ட துணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலை வழியாகவோ ஹெலிகாப்டர் வழியாகவோ கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் அர்ஷாத் சோபி மாவட்டத் துணை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவர் பர்வைசின் என்பவருக்கு தொடர்பு கொண்டார். அவர் வீடியோ கால் மூலமாக டாக்டர் அர்ஷாத் சோபிக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள். மேலும் வீடியோ கால் மூலம் கர்ப்பிணியின் சுகப்பிரசவத்திற்கு உதவிய மருத்துவர் பர்வைசின் செயல் பலரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.