சமூக வலைதளங்களில் ‘கோ இமாச்சல்’ (Go Himachal) என்ற கணக்கில் பதிவிடப்பட்ட ஒரு வீடியோ, இமயமலைப் பிராந்தியத்தின் பாரம்பரியம் மற்றும் நவீன மாற்றங்கள் குறித்த காரசாரமான விவாதத்தை இணையவாசிகள் இடையே ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், இமாச்சலப் பிரதேசத்தின் வண்ணமயமான பாரம்பரிய உடைகள் மற்றும் அதிக அளவிலான தங்க ஆபரணங்களை அணிந்த ஒரு இளம்பெண், திருமணக் கூடாரத்தில் அமர்ந்திருக்கும் பெண்களுக்கு ‘பகார்மி’ (Bacardi) ரக மதுபானத்தைப் பரிமாறுகிறார். இமாச்சலப் பெண்களின் விருந்தோம்பல் பண்பு எனப் புகழ்ந்து இந்தப் பதிவு வெளியிடப்பட்டது. ஆனால், இது பாராட்டுக்குப் பதிலாகக் கடும் விமர்சனங்களையே சந்தித்து வருகிறது.

இந்த வீடியோவில் காட்டப்படும் கலாச்சாரம் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தது அல்ல எனப் பல உள்ளூர் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  வீடியோவில் உள்ள பெண்களின் உடை மற்றும் சமூகக் கூடல் முறைகள், இமாச்சலத்தை விட உத்தரகண்ட் எல்லையில் உள்ள ‘ஜான்சர் பாவர்’  பகுதியைச் சார்ந்ததாக இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மலைவாழ் பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சார நிகழ்வுகளில் உள்நாட்டுப் பானங்களையே பயன்படுத்துவர். ஆனால், இதுபோல வெளிநாட்டு வணிக ரீதியான மதுபானங்களைப் திருமணச் சடங்குகளில் பயன்படுத்துவது பாரம்பரியம் ஆகாது.இது வெறும் சமூக ஊடக கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்யப்பட்ட செயல் என உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வீடியோ மலைப்பகுதிகளில் மதுபானக் கலாச்சாரம் இயல்பான ஒன்றாகி வருவதைக் காட்டுகிறது. இது குறித்து இணையத்தில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

 

பெண்களுக்கு எனத் தனிக் கூடாரம் அமைத்து, அவர்கள் சுதந்திரமாகப் பொழுதுபோக்க வழிவகை செய்வதை ஒரு தரப்பினர் வரவேற்கின்றனர். ஆனால் புனிதமான சடங்குகள் நடைபெறும் இடத்தில் மதுபானத்தைப் புகுத்துவது அப்பிராந்தியத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தல் எனப் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் இணையம் ஒரு செய்தியை வேடிக்கை பார்க்கும் இடமாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது ஒரு கலாச்சாரம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைத் தீர்மானிக்கும் ‘உண்மைச் சரிபார்ப்பாளராக’ இணையவாசிகள் மாறியுள்ளதை இந்த விவாதம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.