ஓடும் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, சக பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அந்தப் பெண்ணிற்குப் பாதுகாப்பான முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. அதாவது  குணாபூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த அந்தப் பெண்ணிற்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தனர். ரயில்வே ஊழியர்கள் தாமதிக்காமல் அவசர உதவிக்கு விண்ணப்பித்தனர். இதையடுத்து, கட்டக் ரயில் நிலையத்திற்கு ரயில் வருவதற்குள் அவசர மருத்துவக் குழு மற்றும் ஆர்பிஎஃப் பெண் காவலர்கள் அடங்கிய குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

 

இருப்பினும், ரயில் சம்பத்தப்பட்ட  நிலையத்தை அடைவதற்கு முன்பாகவே, ரயிலில் இருந்த சக பயணிகள் மற்றும் அங்கிருந்த மருந்தாளுநர் (Pharmacist) ஒருவரின் முதலுதவியோடு அந்தப் பெண்ணிற்குப் பாதுகாப்பாக முதலாவது ஆண் குழந்தை பிறந்தது. ரயில் கட்டக் நிலையத்தை வந்தடைந்ததும், ஆர்பிஎஃப் பெண் காவலர்கள் மற்றும் பயணிகள் இணைந்து தாயையும், குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். அப்போது அந்தப் பெண்ணின் வயிற்றில் மற்றொரு குழந்தையும் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசர ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸ் வாகனத்திற்குள்ளேயே அந்தப் பெண் தனது இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்தார். தற்போது தாயும், இரு குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆபத்தான சூழலில் சாதுரியமாகச் செயல்பட்டு இரட்டைக் குழந்தைகளைப் பத்திரமாக மீட்ட சக பயணிகள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஆர்பிஎஃப் பெண் போலீசாரின் இந்த மனிதாபிமானச் செயல் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருவதோடு, ஒட்டுமொத்த நெட்டிசன்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.