
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கடலூருக்கு சென்றார். இந்த நிலையில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இன்று தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் “பெற்றோர்களை கொண்டாடுவோம்” மாநாடு நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக திருப்பெயர் கிராமத்தில் பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.
அவர் கூறியதாவது, அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம். பிள்ளைகள் மீது பெற்றோருக்கு இருக்கும் அக்கறை, அரசுக்கும் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுகிறது. அன்னை, தந்தை, ஆசிரியர்கள் இங்கு மொத்தமாக கூடியுள்ளது யாரும் காணாத காட்சி. ஒவ்வொரு மாணவனும் தமிழ்நாட்டின் சொத்து என்ற அடிப்படையில் கவனித்து அவர்களை வளர்த்து வருகிறோம் என கூறியுள்ளார்.