உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மா மானசா தேவி கோவிலில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) காலை பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் திரளாக வரும் நிலையில், கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில், கோவிலில் மின்சாரம் தாக்கியதாக பரவிய வதந்தி காரணமாக பக்தர்கள் அச்சத்தில் ஓடத் தொடங்கினர்.

இதனால் படிக்கட்டுகளில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து, பரிதாபமாக 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்து, ஹரித்வார் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவிலுக்கு 100 மீட்டர் தூரத்தில் உள்ள நடைபாதையில் இந்த நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக தகவலறிந்த போலீசார் மற்றும் எஸ்டிஆர்எஃப் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்தும் சம்பவத்தின் காரணங்களை விசாரணை செய்து வருகின்றனர்.

“>

 

இந்த சம்பவம் குறித்து கர்வால் கமிஷனர் ரவிசங்கர் பாண்டே கூறியதாவது, “இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சையில் உள்ளனர். கோயில் வளாகத்தில் பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயில் சில நேரங்களுக்கு மூடப்பட்டது” என தெரிவித்தார். மாநில எஸ்எஸ்பி பிரமோத் தோபல் கூறுகையில், “மின்சாரம் தாக்கியதாக வந்த தவறான தகவலால் பக்தர்கள் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டது” என கூறினார்.

இந்நிலையில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். “மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அனைத்து மீட்பு குழுக்களும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.