வீட்டின் பால்கனி, ஜன்னல்கள் அல்லது கூரைகளில் புறாக்கள் வருவது பொதுவான பிரச்சனையாக உள்ளது. இவை அசுத்தத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி நோய்களையும் பரப்புகின்றன. புறாக்களை பால்கனியில் இருந்து நிரந்தரமாக விரட்ட சில எளிய மற்றும் மலிவான வழிகள் உள்ளன. பால்கனியில் கருப்பு நிற பிளாஸ்டிக் பையை கட்டி வைப்பது ஒரு சிறந்த வழியாகும்; காற்றில் இந்த பை அசையும் போது ஏற்படும் சத்தத்திற்கு பயந்து புறாக்கள் ஓடிவிடும்.

 

 

View this post on Instagram

 

A post shared by Plants Junkies – Annu & Varun (@plantsjunkies)

மேலும், புறாக்களுக்கு மின்னும் மற்றும் அசையும் பொருட்களைக் கண்டால் பயம் என்பதால், பழைய தேவையற்ற சிடிகளை கயிற்றில் கட்டி பால்கனியில் தொங்கவிடலாம். காற்றின் மூலம் இந்த சிடிகள் அசையும் போதும், அவற்றின் மீது சூரிய ஒளி பட்டு மின்னும் போதும் புறாக்கள் அந்த இடத்திற்கு வருவதைத் தவிர்க்கும். விண்ட் சைம்ஸ் (Wind chimes) அல்லது பளபளப்பான ஃபாயில் பேப்பர்களையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

புறாக்கள் வழக்கமாக பால்கனி ரெயிலிங், ஜன்னல் ஓரங்கள் அல்லது ஏசி கம்ப்ரஸர் மீதுதான் வந்து அமரும். அத்தகைய இடங்களில் பிளாஸ்டிக் அல்லது ஸ்டீலால் ஆன ‘பேர்ட் ஸ்பைக்ஸ்’ (Bird spikes) எனப்படும் கூர்மையான முள் போன்ற பட்டைகளை பொருத்தலாம். இதனால் புறாக்கள் அமர இடம் கிடைக்காமல் வேறு இடத்திற்குச் சென்றுவிடும். பொதுவாக பால்கனியில் மற்ற பறவைகளுக்காக வைக்கப்படும் தானியங்கள் மற்றும் தண்ணீரைக் கண்டு புறாக்கள் அதிகளவில் ஈர்க்கப்படுவதால், சில நாட்களுக்கு உணவோ தண்ணீரோ வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், புறாக்களின் இயற்கை எதிரிகளான ஆந்தை அல்லது பூனை போன்ற பிளாஸ்டிக் பொம்மைகளை பால்கனியில் வைக்கலாம்; புறாக்கள் அதை உண்மை என்று நம்புவதற்காக இந்த பொம்மைகளின் இடத்தை அவ்வப்போது மாற்றி வைக்க வேண்டும். ஒருவேளை புறாக்கள் ஏற்கனவே கூடு கட்டி முட்டையிட்டிருந்தால், அவை குஞ்சு பொரித்து பறக்கும் வரை காத்திருந்து, அதன் பின் இடத்தை சுத்தம் செய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.