சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், இந்திய நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் அவர்களது மத அடையாளத்திற்காகப் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் இணையதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சவுதி நபர் ஒருவர் இந்திய நிறுவனத்தின் அரங்கிற்குச் சென்று, “இந்த நிறுவனத்தில் ஒரு முஸ்லிம் கூட பணியாளராக இல்லையா? ஒரு இந்து நிறுவனத்தை இங்கே அனுப்பியது வெட்கக்கேடானது” என மிக மோசமாகப் பேசியுள்ளார்.

தொழில் ரீதியான ஒரு இடத்தில் புகுந்து, மத ரீதியான பாகுபாட்டைத் தூண்டும் வகையில் அவர் பேசியது அங்கிருந்தவர்களையும், இணையவாசிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அம்ஜத் தாஹா கடுமையாகச் சாடியுள்ளார். “வர்த்தகம் என்பது மசூதிக்கு ஆள் எடுக்கும் இடம் அல்ல; நவீன சமூகத்தில் மதக் காவலர்களுக்கு வேலையில்லை” என அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியர்களின் பன்முகத்தன்மையையும், கடின உழைப்பையும் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்த இந்த இனவெறித் தாக்குதலுக்கு உலகெங்கிலும் உள்ள மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சவுதி அரேபியாவில் இது போன்ற மதச் சார்புடைய மோதல்கள் சர்வதேச வணிக உறவுகளைப் பாதிக்கும் என்றும், இது போன்ற அநாகரீகச் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.