பிளாஸ்டிக் தடை சோதனையின் போது ஹோட்டல் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில், மாநகராட்சியை சேர்ந்த ஒப்பந்த பெண் ஊழியர்கள் இருவர் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள ஹனுமான் நகரில் ‘கிரிஸ் பார் மற்றும் ரெஸ்டாரன்ட்’ இயங்கி வருகிறது. இங்கு மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்புப் படையைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதற்காக ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். இதனைத் தவிர்க்க ஹோட்டல் மேலாளர் கோரிக்கை விடுத்தபோது, அந்தப் பெண் ஊழியர்கள் ரூ. 3,000 லஞ்சமாகக் கேட்டுள்ளனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரூ. 2,000 லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
— Naresh Shende (@NareshShen87640) April 12, 2026
இந்த லஞ்சப் பரிமாற்றம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘கிரீன் பிளாஸ்டிக்’ தட்டுப்பாட்டால் சாதாரண பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த நேர்ந்ததாக ஹோட்டல் உரிமையாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை துணை ஆணையர் ராம்தாஸ் கோக்ரே விசாரணை நடத்தினார். லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு ஒப்பந்த பெண் ஊழியர்களும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்திய அந்த ஹோட்டல் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிளாஸ்டிக் தடையின் பெயரால் ஒப்பந்த ஊழியர்கள் இதுபோன்று எத்தனை வியாபாரிகளிடம் பணம் வசூலித்துள்ளனர் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
